தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இணைப்பாக்க செயலகம் மற்றும் இலங்கையின் தேசிய புலமைச் சொத்து அலுவலகம் என்பவற்றுடன் இணைந்து, உலக புலமைச் சொத்து நிறுவனம் மற்றும் ஜப்பான் ஆக்கவுரிமை அனுமதிப்பத்திர அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த ஆக்கவுரிமை அனுமதிப் பத்திரம் தேடுவது தொடர்பான திறன்விருத்தி மற்றும் பயிற்சி செயலமர்வு இன்றைய தினம் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால அவர்களின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
உலக புலமைச் சொத்து அலுவலகத்தினால் 2017ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட 6 வருட கால வரையறையைக் கொண்ட Enabling IP Environment (EIE) கருத்திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டது. புலமைச் சொத்து தொடர்பான கொள்கை அபிவிருத்தி, தொழில்நுட்ப அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், தொழில்நுட்ப மதிப்பீடு, சந்தைப்படுத்தல் போன்றவை உள்ளடங்கிய புலமைச் சொத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப ஒப்படை தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயலமர்வுகள் இந்த கருத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.