- கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. திலங்க சுமதிபால
தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவக (SLIATE) மாணவர்களிடம் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தை பட்டமளிக்கும் நிலைக்கு தரமுயர்த்துவதிலும் நிறுவகத்தின் ஏனைய விடயங்களிலும் பாரம்பரிய வரையறைகளைப்பற்றி சிந்திக்காமல் இணைந்து கைகோர்த்துக்கொண்டு முன்செல்லுமாறு நிறுவகத்தின் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
தெஹிவளையில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்திற்கு விஜயம்செய்தபோது மாணவ பிரதிநிதிகள் மத்தியில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்தபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார். "இந்த கல்வி நிறுவகத்தை பட்டமளிக்கும் தரத்திற்கு உயர்த்தும்போது முதலில் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவக (SLIATE) சட்டம் திருத்தப்பட வேண்டும். நல்ல பெறுபேறுகளைப் பெற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு பாதை அமைத்துக் கொடுப்பது இந்த நிறுவகத்தின் நோக்கமாகும். இந்த கல்வி நிறுவகத்தின் தரத்தை உயர்த்துவதற்கு நாம் எடுத்த முயற்சியை இதை நாங்கள் தனியார்மயப்படுத்தப் போகிறோம் என மாணவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு குழப்படைந்துள்ளனர். ஒருபோதும் அப்படி நடக்காது. எதிர்காலத்தில் நாங்கள் என்ன செய்வோம் என்பதை மாணவர்களுக்கு அவ்வவ்போது வெளிப்படையாக அறிவிப்போம். ஒரு கல்வி நிறுவகத்தை பட்டமளிக்கும் நிலைக்கு தரம் உயர்த்தும்போது அது வெளி உலகுக்கு திறந்துவிடப்பட வேண்டும். வெளி உலகில் உள்ள தொழில் வாய்ப்புகளுக்கு பொருத்தமான அறிவை வழங்கக்கூடிய ஒரு கல்வி நிறுவகத்தை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக சர்வதேச ரீதியாக அறிவு பரிமாறப்படுவது அத்தியாவசியமானதாகும். அதற்கு அமைவாகத்தான் வழங்கப்படுகின்ற பட்டத்தின் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது.
இந்த நிறுவகத்தை மேம்படுத்தும்போது கல்வி சார்ந்த மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் நன்மைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் பௌதிக வளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே அரசாங்கத்திற்கு மாத்திரம் இந்த சுமையை அளித்துவிடாமல் நிறுவகமும் வருமானம் ஈட்டுவதுபற்றி சிந்திக்க வேண்டும். எனவே இந்த நிறுவகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எந்தவித அநீதியும் ஏற்படாத வகையில் எதிர்காலத்தில் ஓர் அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்த எண்ணியுள்ளோம்."
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் (SLIATE) கல்வி கற்கின்ற பெரும்பாலன மாணவர்கள் செல்வந்த பின்னணியற்ற குடும்பங்களில் இருந்து வருகின்ற மாணவர்கள் என்பதனால் கல்வி நிறுவகத்தை தரம் உயர்த்தும்போது அவர்களின் இலவச கல்வி பாதுகாக்கப்படக்கூடிய வகையில் அபிவிருத்தி பணிகள் நடைபெறும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக மாணவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவக (SLIATE) அதிகாரிகள் மற்றும் தெஹிவளை - இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் (SLIATE) பதிற் கடமையாற்றும் பணிப்பாளர் திருமதி. எஸ்.எஸ். சமரக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.